பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை
14. புத்தரின் பொன் மொழிகள்

Some Sayings of the Buddha





மெய்யறிவு நற்பண்பினால் தூய்மையடைகிறது. நற்பண்பு மெய்யறிவினால் தூய்மைபெறுகிறது. எப்போதும் ஒன்றிருக்கும் இடத்தில் மற்றதும் இருக்கும். பண்புடையவன் மெய்யறிவு உள்ளவனாக இருக்கின்றான். மெய்யறிவுடையவன் பண்புடையவனாக இருக்கின்றான். இரண்டும் சேர்ந்திருப்பது உலகிலேயே மிக மேன்மையானது.


* * * * * * * *

எண்ணங்கள் மனதிலிருந்தே தோன்றுகின்றன. மனமே முதன்மையானது. மனமே அவைகளை வழி நடத்துகிறது. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும், செயற்பட்டாலும் அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடரும்.


* * * * * * * *

ஒருவன் எவரையும், எங்கும், எதற்கும் குறை கூறவோ வெறுக்கவோ கூடாது. கோபத்தினாலோ போட்டியினாலோ பிறருக்கு வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்.


* * * * * * * *

எப்படி இந்த மாபெருங் கடல் ஒரே சுவையான உப்புச் சுவையை உடையதாக இருக்கிறதோ, அதே போல் இந்தத் தம்மமும் ஒரே சுவையை, விடுதலை என்னும் சுவையை உடையதாக இருக்கிறது.


* * * * * * * *

பிறருடைய குற்றத்தை எளிதில் காண முடிகிறது. ஆனால், தன்னுடைய குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கிறது. பிறருடைய குற்றங்களை உமியைத் தூற்றுவது போன்று தூற்றுகிறவர், மிருகங்களின் தோலைக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்ளும் வேட்டைக்காரனைப் போலத் தன் சொந்தக் குற்றத்தை மறைத்துக் கொள்கிறார். எப்போதும் பிறருடைய குற்றத்தையே தேடிக் கொண்டிருப்பவர்கள் எளிதில் கோபத்தின் வசம் ஆட்படுகிறார்கள். தங்களுடைய குற்றங்களை அழிக்க முடியாத அளவுக்கு வளர விட்டு விடுகிறார்கள்.


* * * * * * * *

பூக்களைக் கொண்டு பலவிதமான மாலைகள் தொடுக்கப்படுவது போல, பூக்களைப் போலவே தோன்றி மறையும் மனிதனாகப் பிறந்தவனும் பல நன்மைகளைச் செய்ய முடியும்.


* * * * * * * *

நீங்கள் மற்றவர்களிடம் பேசும்பொழுது, சரியான நேரத்திலோ அல்லது தவறான நேரத்திலோ, காரணத்துடனோ அல்லது காரணமின்றியோ, அமைதியாகவோ அல்லது கடுமையாகவோ, ஒரு குறிக்கோள் பற்றியோ அல்லது குறிக்கோள் இன்றியோ, மனம் நிறைந்த அன்புடனோ அல்லது மனம் நிறைந்த வெறுப்புடனோ பேசலாம். அப்பொழுது கீழ்க்கண்டவாறு உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும்:

'நம் மனம் தவறான வழியில் செல்லாது, தீயவைகளைப் பேசாது, இரக்கத்துடனும் கருணையுடனும் மனம் நிறைந்த அன்புடனும் வெறுப்பின்றியும் வாழலாம். நாம் நிறைந்த அன்புடன் ஒருவரிடம் தொடங்கி, விசாலமான, நிறைந்த, அளவிட முடியாத, பகைமை இல்லாத கேடற்ற இந்த அன்பை இவ்வுலகெலாம் பரப்பி அனைவரிடமும் அன்பு காட்டி வாழலாம்.' இவ்வாறு உன்னை நீ பயிற்று வித்துக் கொள்ள வேண்டும்.


* * * * * * * *

சில சமயம் கட்டாயம் நடக்கும் என்று நினைப்பது நடப்பதில்லை. நிச்சயமாக நடக்காது என்று நினைப்பது நடந்துவிடும். ஆண், பெண்களின் மகிழ்ச்சி அவர்களின் எதிர்பார்ப்புகளைச் சார்ந்திருப்பதில்லை.


* * * * * * * *

மெய்யறிவுடையவனை மூன்று விதத்தில் தெரிந்து கொள்ளலாம். எந்த மூன்று? அவன் தன் குற்றங்களை உள்ளபடியே தெரிந்து கொள்கிறான். தெரிந்தகொண்ட பின் அதனைத் திருத்திக் கொள்ள முற்படுகிறான். மற்றவர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டால் அவர்களை மன்னித்து விடுகிறான்.

I
* * * * * * * *

தீமையைத் தவிர், நன்மை செய்யப் பழகு, மனத்தைத் தூய்மையாக்கு. இவையே புத்தர்களின் போதனையாம்.
* * * * * * * *

நீரில் இருந்து அறிந்து கொள்வீர்:
மலையில் பிளவுகளிலும் வெடிப்புகளிலும் மோதுண்டு
மிகுந்த இரைச்சலுடன் புரண்டோடும் சிற்றோடைகள் உண்டு.
ஆனால் மாபெரும் நதிகளோ அமைதியாகவே தவழ்ந்து செல்லும்.

வெறுமைக் கலமே ஒலி செய்யும்,
நிறை குடம் தளும்பாது.
அறவிலி அரை நிறை குடம்
அறிஞனோ ஆழமான அமைதியான குளம்.
* * * * * * * *

கேவலமான குற்றவாளி இரட்டைப் பிடியுள்ள இரம்பத்தால் உங்கள் கை கால்களைத் துண்டிக்கும் போது
உங்கள் உள்ளத்தைப் பகைமையால் நிரப்பிக் கொண்டால்
உங்களை என் போதனைகளைப் பின் பற்றுபவராகக் கூறமுடியாது.


* * * * * * * *

அன்பின் காரணமாக உருவாகும் மனச் சுதந்திரத்தினைப் பேணி வளர்த்து, எப்போதும் பயின்று, தனது வாகனமாகவும் அத்திவாரமாகவும் அமைத்து, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி ஒன்று சேர்த்தால் ஒருவர் இந்தப் பதினொரு விதங்களில் ஆசீர்வதிக்கப்படுவார். எப்போதுமே மகிழ்வோடு தூங்குவார், மகிழ்வோடு விழிப்பார், தீய கனவுகள் காணார், மனிதர்களின் அன்புக்குரியவராவார், மற்ற உயிர்களின் அன்புக்குரியவராவார், கடவுளர் ஆதரிப்பர், தீயிலிருந்தும், விஷங்களிலிருந்தும், ஆயுதங்களிடமிருந்தும் காப்பாற்றப்படுவார், மன ஒருமைப்பாடு எளிதாக அடைவார், பொலிவுடன் காணப்படுவார், அமைதியாக மரணம் அடைவார், மரணத்தின் பின் சொர்க்கத்தில் மறுபிறப்பெடுப்பார்.
* * * * * * * *

நல்லவர்கள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் விரைவில் சமாதானத்தை நாடி நீண்ட நாள் நிலைக்கக் கூடிய ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதற்கும் உதவாத உடைந்த விரிசலுடைய பானைகளைப் போல முட்டாள்கள் சமாதானத்தை நாடுவதில்லை. இதைப் புரிந்த கொண்ட ஒருவன், இந்தப் போதனையைச் சிந்தித்துப் பார்ப்பவன் எது கடினமானதோ அதைச் செய்ய முற்படுகிறான். அவன் போற்றத்தக்கவன். யார் ஒருவன் மற்றவரின் தூற்றுதல்களைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே சமரசம் செய்வதற்குத் தகுதியானவன்.


* * * * * * * *

சுவையுள்ளதோ சுவையற்றதோ அதிகமோ கொஞ்சமோ அன்போடு செய்த எதையும் உண்ண முடியும். உண்மையில் அன்பே உயர்ந்த சுவை.
* * * * * * * *

பொறாமைகொண்ட, சுயநலமுள்ள அல்லது நேர்மையற்ற ஒருவன், சிறந்த பேச்சாளியாகவும், கட்டுடலோடும் இருந்தாலும் கவர்ச்சியற்றவனாகவே தோன்றுவான். ஆனால் இந்தத் தீய எண்ணங்களை அகற்றியவன், வெறுப்பில்லாதவன், அவனே (அல்லது அவளே) உண்மையிலேயே அழகானவன்(ள்).


* * * * * * * *

அடக்கமில்லாத, ஒழுக்கமில்லாத அல்லது நிறைவடையாத ஒருவன் மற்றொருவனை அடக்கத்தோடு, ஒழுக்கத்தோடு, நிறைவோடு வாழ வைக்க முடியாது. ஆனால் அடக்கமுள்ள, ஒழுக்கமுள்ள, நிறைவுள்ள ஒருவன் மற்றவரையும் தன்னைப் போலவே உருவாக்க முடியும்.


* * * * * * * *

மனநிறைவே மாபெரும் செல்வமாம்.


யாராவது என்னையோ தம்மத்தையோ அல்லது சங்கத்தையோ திறனாய்வு செய்தாலோ அல்லது குறை கூறினாலோ நீ கோபப்படவோ ஆத்திரப்படவோ கூடாது. ஏனென்றால் அத்தகைய செயல் உன்னைத் தெளிவற்றவனாக்கி அவர்கள் கூறியது நன்மையா தீமையா என்று விளங்காமற் செய்து விடும். அவர்களுக்கு எளிமையாக அவர்கள் கூற்றில் உள்ள தவற்றைப் புரியவை. 'அது தவறு, அது சரியானதன்று, அது எங்கள் வழி அன்று. நாங்கள் அவற்றைச் செய்வதில்லை' என்று கூறு.

அதேபோல் யாராவது என்னையோ தம்மத்தையோ அல்லது சங்கத்தையோ புகழ்ந்து பேசினால் அதற்காக நீ பெருமைப் படவோ கர்வம் கொள்ளவோ கூடாது. ஏனென்றால் அத்தகைய செயல் உன்னைத் தெளிவற்ற வனாக்கி அவர்கள் கூறியது நன்மையா தீமையா என்று விளங்காமற்செய்து விடும். அப்படி புகழ்பவர்களுக்கு அவர்கள் கூற்றில் உண்மை இருப்பதைக் கூறு. 'இது சரியானது, அது மிகச் சரியானது, இதுதான் எங்கள் வழி, அதைத்தான் நாங்கள் செய்கிறோம்' என்று கூறு.

* * * * * * * *

சொற்களுக்கு ஐந்து குறிகளிருந்தால் அவை தீயசொற்கள் அல்ல, நல்ல சொற்கள். அறிஞர்களால் புகழப்பட்டு போற்றப் படுபவை. எந்த ஐந்து? அவை சரியான நேரத்தில் சொல்லப்பட்டவை, வாய்மை உடைத்தவை, அமைதியாகப் பேசப்பட்டவை, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்பவை, அன்போடு பேசப்படுபவை.

* * * * * * * *
ஆழமான ஏரி தெளிவாகவும், அசைவற்றும் இருப்பதைப்போல, அறிவுடையோர் போதனைகளைக் கேட்கும் போது முற்றாக அமைதியடைகிறார்கள்.


அதிகார பூர்வமான அறிவிப்பையும், பழக்க வழக்கங்களையும், வதந்திகளையும், வேதாகம நூட்களையும், உணர்ந்த முடிவினையும், நிறுவப்பட்ட கோட்பாட்டினையும், திறமையான வாதத்தினையும், விசேட சித்தாந்தத்தினையும் நம்பி இருக்காதீர்கள். மற்றவர் சிறந்த அறிவாளி என்பதனாலோ, ஆசிரியரின் மேல் உள்ள நன்மதிப்பின் காரணமாகவோ அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எது சேதம் விளைவிப்பது, எது அதிருப்தி தருவது என்று தெரிந்த பிறகு அதை விட்டு விடுங்கள். உங்களுக்கு எது சரியானது மேன்மையானது, அறிஞர்களால் பாராட்டப்பட்டது, அதை ஏற்றுப் பயிற்சி செய்தால் பயன்தந்து மகிழ்ச்சியளிப்பது என்று தெரிந்த பிறகு அதை வளர விடுங்கள். "


* * * * * * * *

சில துறவிகள் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்த புத்தர் அவர்களிடம் சொன்னார்: 'மிருகங்கள் ஒன்றுக்கொன்று மரியாதையுடனும், விட்டுக்கொடுத்தும், நற்பண்புடனும் இருக்கும் போது நீங்களும் அவ்வாறே இருக்க வேண்டும்.'


* * * * * * * *

செல்வம் போன்றவற்றை இழந்துவிட்டால் அது ஒன்றும் பெரிய இழப்பல்ல. ஆனால் அறிவை இழந்து விட்டால் அது பேரிழப்பாகும். செல்வம் போன்ற வற்றை அடைந்துவிட்டால் அது ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவமுடையதல்ல. அறிவைப் பெறுவதே மிக முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும்.


* * * * * * * *

பொறுப்பற்ற ஒருவன் புனித நூட்களைப் படித்தும், அதன் படி நடக்கவில்லையென்றால், அது மாடு மேய்ப்பவன் மற்றவனின் மாடுகளைக் கணக்கிடுவதைப்போல, ஆன்மீக வாழ்க்கையின் எந்தப் பயனையும் அடைய முடியாது.
* * * * * * * *

தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்
குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்
தாயன்பைப் போல எல்லையிலா அன்பை
உலகில் தோன்றிய உயிரினத்தின் மீது காட்டுங்கள்.


மற்றவர்க்கு அறிவுரை கூற விரும்பும் ஒருவர் முதலில் தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்; 'உடலாலும், சொல்லாலும் முழுத் தூய்மையை மட்டுமே நான் கடைப்பிடிக்கிறேனா இல்லையா? இந்தப் பண்புகளை நான் கொண்டிருக்கிறேனா இல்லையா?' அப்படியில்லையென்றால், சந்தேகமின்றி மக்கள் 'சொல்லாலும், உடலாலும் சரியான நன்னடத்தையை முதலில் நீங்கள் கடைபிடியுங்கள்' என்று கூறுவார்கள். இதைச் சொல்வதற்கு மக்களிருக்கின்றனர்.

மறுபடியும் மற்றவர்க்கு அறிவுரை கூறவிரும்பும் ஒருவர் முதலில் தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். 'தீமையைத் தவிர்த்து மற்றவரிடத்தில் அன்பை வளர்த்துக் கொண்டுள்ளேனா இல்லையா? இக்குணம் என்னுள் நிலைநாட்டப்பட்டதா இல்லையா?' அப்படி நிலை நாட்டப்படவில்லை யென்றால், மக்கள் சிலர் 'உன்னிடம் முதலில் அன்பை வளர்த்துக்கொள்!' என்பார்கள்.


* * * * * * * *

பெரிய குடை மழைக்காலத்தில் நம்மை மழைத் துளியிலிருந்து பாதுகாப்பதைப் போலத் தர்மத்தைப் பயிற்சி செய்பவர்களைத் தர்மம் பாதுகாக்கும்.
* * * * * * * *

காலையிலும், மதியத்திலும், இரவிலும் தர்மத்தைப் பின் தொடர்பவர்கள் காலையிலும், மதியத்திலும், இரவிலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


யாராவது ஒருவன் உங்களைத் திட்டினாலோ தாக்கினாலோ உங்கள் மீது கல்லெறிந்தாலோ கட்டையாலோ வாளாலோ தாக்கினாலோ உங்கள் உலக ஆசா பாசங்களையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டுக் கீழ்க்காணுமாறு உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். என் மனம் அலைபாயாயது, தீய வார்த்தைகளைப் பேசமாட்டேன். வெறுப்பைப் புறம் தள்ளி மற்றவரின் நலனுக்காக அன்புடனும் கருணையுடனும் வாழ்வேன் என்று பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.


* * * * * * * *

பாசனக்காரர்கள் நீரைச் செலுத்திப் பாய்ச்சுகிறார்கள். அம்பு விற்போர், அம்புகளைக் கோணலின்றிச் செவ்விதாகச் செய்கிறார்கள். தச்சர் மரங்களை உருவமைக்கிறார்கள். அறிஞர் தம்மைத் தாமே அடக்கி ஆள்கிறார்.
* * * * * * * *

உடன் வாழும் ஆன்மீக நண்பர்களுடன் எப்படி இணக்கத்துடன் வாழ்கிறார் என்று புத்தர் அநுருத்தரைக் கேட்டார். அவர் சொன்னார்: 'இவ்வகையான ஆன்மீக நண்பர்களுடன் வாழ்வது ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். பொதுவிடத்திலும் தனிமையிலும் அவர்களுடன் மனதாலும், பேச்சாலும் நடத்தையாலும் அன்போடு நடந்து கொள்கிறேன். என் விருப்பங்களை ஒதுக்கி வைத்து அவர்கள் விருப்பங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்கிறேன். இதனால் நாங்கள் பல உடல்களைக் கொண்டிருந்தாலும் ஓர் உள்ளத்தைக் கொண்டுள்ளோம்.'


* * * * * * * *

முரண்பாட்டில் ஆபத்தைக் கண்டு, இணக்கத்தில் அமைதியைக் கண்டு, ஒற்றுமையோடும் அன்புள்ளத்தோடும் வாழவேண்டும். இதுவே புத்தர்களின் போதனையாம்.
* * * * * * * *

நால்வகையான மக்கள் உலகில் உளர். எந்த நான்கு? தன்னுடைய நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்கறை இல்லாதவர்; மற்றவர் நலத்தில் அக்கறை கொண்டு தன் நலத்தில் அக்கறை இல்லாதவர்; தன் நலத்தில் அக்கறை கொண்டு மற்றவர் நலத்தில் அக்கறை இல்லாதவர்; தன் நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்றை உள்ளவர். இந்த நான்கு வகை மக்களுள் தன் நலத்திலும் மற்றவர் நலத்திலும் அக்கறை உள்ளவரே முதல்வர், மேலோங்கியவர், உச்சத்தில் இருப்பவர், தலை சிறந்தவர்.


* * * * * * * *

புத்த தம்ம சங்கத்தில் நீ சரணடைந்தால் உன்னிடம் அச்சமோ நடுக்கமோ என்றுமே எழாது.
* * * * * * * *

திறமையான இல்லறத்தவராக இருப்பது நன்று. உணவைப் பகிர்ந்து கொள்வது நன்று. சேர்த்த செல்வத்தைப் பற்றித் தன்னடக்கத்துடன் இருப்பது நன்று. அந்தச் செல்வம் குறைந்தாலும் மனம் தளராமல் இருப்பது நன்று.


வெறுப்பை அன்பினால் வெல்க. தீமையை நன்மையால் வெல்க. கருமித்தனத்தைத் தானத்தினால் வெல்க. பொய்யை மெய்யினால் வெல்க.


* * * * * * * *

அன்பையும் மரியாதையையும், உதவி செய்யும் மனப்பான்மையையும் ஒத்துப்போகும் தன்மையும், இணக்கத்தையும் ஒற்றுமையையும் ஆறு விதத்தில் பேணலாம். ஆன்மீக வாழ்வில் உடனிருப்போருடன் பொது இடத்திலும் தனிமையிலும் அன்போடு நடந்து கொள்வது; அன்போடு பேசுவது; அன்போடு நினைப்பது; எந்தத் தயக்கமும் இல்லாமல், நாம் நியாயமாகப் பெற்ற எதையும், அது நாம் இரந்து பெற்ற உணவாக இருந்தாலும் அவர்களோடு பகிர்ந்து கொள்வது; அவர்களுக்கும் நமக்கும் உள்ள முழுமையான, அடக்கப்படாத, சுதந்திரம் தரும், சான்றோர்களால் போற்றப்படும், மன ஒருமைப்பாட்டிற்கு ஏதுவான பண்புகள்; ஆன்மீக வாழ்வில் உடனிருப்போருடன் பொது இடத்திலும் தனிமையிலும் கொண்டிருக்கும் மேன்மையானவை பற்றிய, சுதந்திரத்திற்கு எடுத்துச் செல்பவை பற்றிய, துக்கத்தை அறவே ஒழிப்பவை பற்றிய அறிவு; இவை ஆறும் இருக்கும் போது அன்பும் மரியாதையும், உதவி செய்யும் மனப்பான்மையும் ஒத்துப்போகும் தன்மையும், இணக்கமும், ஒற்றுமையுமிருக்கும்.


* * * * * * * *

தம்மத்தை விரும்புவோர், பேச்சிலும், எண்ணத்திலும், செய்கையிலும் தூய்மையாக இருப்பவர், எப்போதும் அமைதியோடும், நற்குணத்தோடும், கவனத்தோடும், ஒழுக்கத்தோடும் இருப்பவர், உலகில் நிறைவாக வாழ்கின்றனர்.
* * * * * * * *

ஒருவனின் சிறந்த நண்பன் யார்? எவருடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் நன்மை நிறைந்தவைகளாகத் தூய்மையானவையாக இருக்கின்றனவோ அவையே ஒருவனின் சிறந்த நண்பர்கள். 'நாங்கள் எங்களைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை!' என்று அவர்கள் கூறினால்கூட அவையே (அக்குணங்களே) அவர்களுடைய உண்மையான நண்பர்கள். ஏன்? ஏனென்றால் ஒருவன் தனது நண்பன் தனக்குச் செய்வதைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.


* * * * * * * *

நற்செயலைச் சாதாரணமாக நினைத்து
'என்னால் அப்படி இருக்க முடியாது '
என்று சொல்லாதீர்கள்.
சீராகத் தொடர்ந்து விழும் சிறு துளிகள்
குவளையில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வைச் சிறிது சிறிதாக அடைகிறார்.


* * * * * * * *

ஒரு முறை ஒரு துறவி சீதபேதியால் பாதிக்கப்பட்டு அவருடைய கழிவுகள் கிடந்த இடத்திலேயே விழுந்து கிடந்தார். அப்போழுது துறவிகளின் விடுதிகளுக்கு வருகை தந்த அண்ணலும் ஆனந்தரும் அந்தத் துறவி கிடந்த இடத்திற்கு வந்தனர். அண்ணல் துறவியைப் பார்த்து,

'துறவியே, உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று வினவினார்.

'நான் சீதபேதியால் துன்புறுகிறேன்!'

'உங்களைக் கவனிக்க யாருமே இல்லையா?'

'இல்லை அண்ணலே!'

'மற்ற துறவிகள் ஏன் உங்களைக் கவனிக்கவில்லை?'

'ஏனென்றால் என்னால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை அண்ணலே!'

பின்னர் அண்ணல் ஆனந்தரை அழைத்து,

'நீர் கொண்டு வாருங்கள். நாம் இந்தத் துறவியைக் குளிப்பாட்டுவோம்' என்றார். ஆனந்தர் நீர் கொண்டு வந்தார். அண்ணல் நீரைத் துறவியின் மீது ஊற்ற ஆனந்தர் தேய்த்துக் குளிப்பாட்டினார். அண்ணலும் ஆனந்தரும் அத்துறவியைத் தூக்கிக் கொண்டுபோய் ஒரு படுக்கையில் கிடத்தினர். பிறகு அண்ணல் மற்றத் துறவிகளையெல்லாம் அழைத்து, 'துறவிகளே நீங்கள் ஏன் அந்த நோய்வாய்ப்பட்டிருக்கும் துறவியைக் கவனிக்கவில்லை?' என்று கேட்டார்.

'ஏனென்றால் எங்களுக்கு அவரால் எந்தப் பயனும் இல்லை அண்ணலே!' என்றனர்.

'உங்களைக் கவனிப்பதற்கு உங்களுக்கு அன்னையோ தந்தையோ இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவில்லையென்றால் பின் யார் தான் கவனிப்பார்? எனக்குப் பணிவிடை செய்ய விரும்புவோர் நோயாளிகளுக்கும் பணிவிடைசெய்ய வேண்டும்.'



* * * * * * * *

தன் உடலுறுப்பைக் காப்பாற்றச் செல்வத்தை விட்டுக் கொடுப்பவன் அல்லது உயிரைக் காப்பாற்ற உடலுறுப்பைத் தியாகம் செய்பவன் தர்மத்திற்காகத் (வாய்மைக்காக) தன் செல்வத்தையும், உடலுறுப்பையும், உயிரையும், எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
* * * * * * *

நம்மை விடப் பலசாலி ஒருவன் நம்மிடம் மரியாதை இன்றிப் பேசும் போது அவனுக்குப் பயந்து அதனைப் பொறுத்துக் கொள்கிறோம். நமக்குச் சமமானவரின் மரியாதையற்ற பேச்சை வாக்கு வாதத்தைத் தவிர்ப்பதற்காகப் பொறுத்துக் கொள்கிறோம்.ஆனால் நமக்குக் கீழ்ப்பட்ட ஒருவரின் கடுமையான பேச்சைப் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறுமையாகும். இது சான்றோர்கள் வாக்கு. ஆனால் வெளி தோற்றத்திலிருந்து யார் நம்மை விடப் பலசாலி, சமமானவர் அல்லது கீழானவர் என்று எப்படித் தெரிந்து கொள்வது? உண்மையில் சில சமயம் கவர்ச்சியற்றது நன்மைக்குப் பின்னால் மறைந்திருக்கும். எனவே எவருடன் பேசும் போதும் பொறுமையாகப் பேசுங்கள்.


* * * * * * * *

தானங்களில் சிறந்தது தம்ம தானம்.


* * * * * * * *

நமது வெற்றிகளைக் கண்டு நாம் திருப்தியும் மகிழ்வும் கொள்வது போலவே மற்றவரின் வெற்றிகளைக் கண்டும் நாம் திருப்தியும் மகிழ்வும் கொள்ளவேண்டும்.


* * * * * * * *

மூடிய கையுடன் போதிக்கும் ஆசிரியர் ஏதோ இரகசிய போதனைகளை மறைத்து வைத்திருப்பது போலன்றி மறைத்த அல்லது திறந்த என்ற கருத்தே இல்லாமல் நான் தர்மத்தைப் போதித்திருக்கின்றேன்.


நான் சென்ற பிறகு தர்மமே உங்கள் ஆசிரியராகட்டும்.


அவ்வப்போது உங்கள் குறைகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது நல்லது. அவ்வப்போது மற்றவர் குறைகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதும் நல்லது. அவ்வப்போது உங்கள் பண்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது நல்லது. அவ்வப்போது மற்றவர் பண்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதும் நல்லது.


* * * * * * * *

அறிஞர் நன்றியுள்ளவராக இருக்கிறார். அவர் பக்தியுள்ள மன மகிழ்ச்சியூட்டுகிற நண்பர். துன்பத்தில் உள்ளவர்களை மரியாதையுடன் கவனிக்கின்றார். எனவே அவரை 'நல்லவர்' என்று சரியாகக் கூறுகிறோம்.
* * * * * * * *

புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான்; மறுமையிலும் மகிழ்ச்சி யடைகிறான்; அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன் தன்னுடைய நல்ல செய்கைகளைக் கண்டு மகிழ்ந்து மேன்மேலும் இன்பமடைகிறான்.


* * * * * * * *

தவறு செய்வதை விட்டு விடுங்கள். அப்படி விட்டு விட முடியும். முடியாதென்றால் நான் உங்களை விட்டு விடக் கூற மாட்டேன். முடியும் என்பதால் தான் நான் கூறுகிறேன், 'தவறு செய்வதை விட்டு விடுங்கள்' தவறு செய்வதை விட்டு விட்டால் அது உங்களை நட்டத்திற்கும் சோகத்திற்கும் எடுத்துச் செல்லுமானால் உங்களிடம் அவ்வாறு கூறமாட்டேன். அது உங்களுக்கு நலனும் மகிழ்ச்சியும் உண்டாக்கும். எனவே கூறுகிறேன், 'தவறு செய்வதை விட்டு விடுங்கள்.'

நல்லதைப் பேணுங்கள். அப்படிச் செய்ய முடியும். முடியாதென்றால் நான் உங்களை அப்படிச் செய்யுமாறு கூற மாட்டேன். முடியும் என்பதால் தான் நான் கூறுகிறேன், 'நல்லதைப் பேணுங்கள்.' நல்லதைப் பேணுவதால் அது உங்களை நட்டத்திற்கும் சோகத்திற்கும் எடுத்துச் செல்லுமானால் உங்களிடம் அவ்வாறு கூறமாட்டேன். ஆனால் அது உங்கள் நலனையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். எனவே கூறுகிறேன், 'நல்லதைப் பேணுங்கள்.'


* * * * * * * *

எல்லோரும் தண்டனைக்கு அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் வாழ்க்கை பிரியமானது. மற்ற உயிர்களையும் உன் உயிரோடு ஒப்பிட்டு நோக்கி ஒன்றையும் கொல்லாதே; கொல்வதற்கும் உடன்படாதே.

All tremble at punishment, life is dear to all. Therefore, put yourself in the place of others and neither kill nor condone killing. Dhp.130

* * * * * * * *

ஒரு மரத்தின் நிழலில் உட்கார்ந்தோ, படுத்தோ இருப்பவர், அந்த மரத்தின் ஒரு கிளையைக் கூட ஒடிக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர் ஒரு நண்பனுக்குத் துரோகம் செய்பவராவார். ஒரு தீயவராகிறார்.
* * * * * * * *

இமயமலையைப் போன்று, நல்லவர்கள் தொலைவிலிருந்தே பிரகாசமாகத் தோன்றுகின்றனர். இரவில் எய்யப்பட்ட அம்பைப் போலத் தீயவர்கள் எவருக்கும் தென்படுவதில்லை.
* * * * * * * *

"இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று அண்ணல் கேட்டார்.
"கண்ணாடியின் பயன் என்ன?"
"பிரதிபலிப்பதற்காக, ஐயா" பதிலளித்தார் இராகுலர்.
"அதுபோல உடலால், சொல்லால், மனத்தால் செய்ய வேண்டிய ஒரு செயலைக் கவனமாகச் சிந்தித்த பின்பே செய்ய வேண்டும்."

வில்லைப் போலவும் மூங்கிலைப் போலவும் வளைந்து கொடுத்தால் எவருடனும் வேற்றுமை உருவாகாது.
* * * * * * * *

கங்கையாறு ஓடுகிறது, தாழ்வான பகுதியை நோக்கி ஓடுகிறது. கிழக்கு நோக்கி ஓடுகிறது. அதைப்போலவே அட்டாங்கமார்க்கமென்னும் அந்த உயர்ந்த எட்டு வழிகளை எவரெவர் பயன்படுத்திப் பின்பற்றி வளர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் நிருவாண நிலை என்னும் திசை நோக்கியே செல்கின்றனர்.
* * * * * * * *

உண்மையில், நல்லவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர்.
* * * * * * * *

'அவன் என்னை இகழ்ந்து பேசினான், என்னைத் தாக்கினான், என்னைத் துன்புறுத்தினான், என் உடைமையைக் கவர்ந்து கொண்டான்' என்பது போன்ற எண்ணங்களை ஒருவன் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய வெறுப்பு ஒருபோதும் நீங்காது. அப்படிப்பட்ட எண்ணங்களை விட்டு விடுபவனின் வெறுப்பு நீங்கிவிடுகிறது.

ஏனெனில், வெறுப்பை வெறுப்பினால் நீக்க முடியாது. வெறுப்பை அன்பினாலேயே நீக்க முடியும். இதுதான் தொன்றுதொட்டு நிலைத்த தர்மமாகும்.
* * * * * * * *

பண்புள்ளவர்களுக்கு எல்லா நாளும் சிறந்த நாள் தான். அவர்களுக்கு எல்லா நாளும் புனித நாளேயாகும்.


* * * * * * * *

ஆடம்பரமான ஆபரணங்கள் அணிந்திருந்தாலும், ஒருவர் அமைதியுடனும், தன்னடக்கத்துடனும், புனித வாழ்வில் ஈடுபட்டவராகவும், யாருக்கும் தீங்கு செய்யாதவராகவும் இருந்தால், அவரே உண்மையான துறவி, உண்மையான மதகுரு, உண்மையான பிக்கு.



* * * * * * * *

மற்றவரை விசாரணை செய்யும் நீதிபதி ஆகாதீர்கள். மற்றவரைக் கண்டிக்காதீர்கள். மற்றவர் குறைகளைக் கண்டிப்பவன் தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறான்.
Do not be a judge of others, do not judge others. Whoever judges others digs a pit for themselves. A.III,350

* * * * * * * *

நரிகள் ஊளையிடுவதையும் பறவைகள் பாடுவதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மனிதன் சொல்வதைச் சரியாகக் கணிப்பது மிகக் கடினமான செயலாக உள்ளது. 'அவன் என் உறவினன், என் நண்பன், என் கூட்டாளி' என்று முன்னர் ஒருவர் உங்களை மகிழ்வித்திருந்ததால் அவரைப் பற்றி நீங்கள் இப்படிப் பெருமையாக நினைக்கலாம். ஆனால் இப்போது அவர் உங்கள் எதிரியாகக் கூட இருக்கலாம். நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தினால் அவர்கள் எப்போதும் நம்மை நெருங்கியிருக்கின்றனர். நம்மைப் பிடிக்காதவர்கள் எப்போதும் தொலைவிலேயே உள்ளார்கள். கடல் கடந்து இருந்தாலும் உண்மையான நண்பன் உண்மையான நண்பனாகவே இருக்கின்றான். கடல் கடந்து இருந்தாலும் நேர்மையற்றவன் நேர்மையற்றவனாகவே இருக்கின்றான்.


* * * * * * * *
புத்தரின் வார்த்தைகள்
புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை
ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய  எஸ். தம்மிக்கா
தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.

THE WORDS OF THE BUDDHA
Daily Readings from the Buddhist Scriptures
By Bhante S. Dhammika

ஏப்ரல்  91-120  April 


91. மனம் ஒளி தரக் கூடியது. ஆனால் அது புற மாசுகளால் கறை பட்டிருக்கிறது. சாதாரண மக்கள் இதை உணராததால் மனத்தைப் பண்படுத்தாமல் வைத்திருக்கின்றனர்.

மனம் ஒளிமயமானது. புற மாசுகளால் ஏற்பட்ட கறையைத் தூய்மைப் படுத்தலாம். இதனை உயர்குடிமாணவன் உணர்கிறான். உணர்ந்து மனத்தைப் பண்படுத்துகிறான்.


A.I,10

92. ஒருவனின் சிறந்த நண்பன் யார்? ஒருவனின் மோசமான எதிரி யார்?

யாருடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் தீமையானவையாக இருக்கின்றனவோ அவையே ஒருவனின் மோசமான எதிரியாம். 'நாங்கள் எங்களை மிகவும் கவனித்துக்கொள்கிறோம்' என்று கூறினால் கூட, அவையே (அக்குணங்களே) அவர்களின் மோசமான எதிரிகளாம். ஏன்? ஏனென்றால் ஒருவன் தன் எதிரிக்குச் செய்யும் தீமைகளை இக்குணங்கள் தனக்கே செய்துவிடும்.

எவருடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் நன்மை நிறைந்தவைகளாகத் தூய்மையானவையாக இருக்கின்றனவோ அவையே ஒருவனின் சிறந்த நண்பர்கள். 'நாங்கள் எங்களைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை!' என்று கூறினால்கூட அவையே (அக்குணங்களே) அவர்களுடைய உண்மையான நண்பர்கள். ஏன்? ஏனென்றால் ஒருவன் தனது நண்பன் தனக்குச் செய்வதைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.


93. பேராசை, காழ்ப்புணர்ச்சி, மாயம் என்னும் ஏமாற்றம் ஆகியவை திறனற்றவை. பேராசை, காழ்ப்புணர்ச்சி, ஏமாற்ற உணர்வுடைய ஒருவன் உடலால், சொல்லால், செயலால் செய்வதெல்லாம் திறனற்றவையே. மனம் கட்டுப்படுத்தப்படாமல், பேராசை, காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம் இவற்றால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் செயல்கள் - நீதியற்ற முறையில் ஒருவருக்குத் தண்டனை கொடுப்பது, சிறையிலிடுவது, அபராதம் விதிப்பது, நாடுகடத்துவது, தன்னிடம் பலமிருப்பதால் 'வல்லான் வகுத்ததே சட்டம்' என்று மற்றவர்க்குத் தீங்கு விளைவிப்பது - அவை அனத்தும் கூடத் திறனற்ற செயல்களே.


A.I,201

94. உலக முன்னேற்றத்திற்கு நான்கு வழிகள் நம்மை அழைத்துச் செல்கின்றன. எந்த நான்கு? விழிப்பாக இருக்கும் போது செய்து முடித்தல் அல்லது சாதித்தல், எச்சரிக்கையாக இருக்கும் போது சாதித்தல், நல்ல நட்பிருக்கும் போது சாதித்தல், சமநிலையான வாழ்க்கை நடத்தும் போது சாதித்தல் ஆகியவையே அவை.

விழிப்பாக இருக்கும் போது சாதித்தல் என்றால் என்ன? இதன் தொடர்பாக, ஒருவன் வாழ்க்கை நடத்த எவ்வழியில் பொருளீட்டினாலும், விவசாயம் செய்தோ, வாணிகம் செய்தோ, ஆடுமாடு வளர்த்தோ, வில்வித்தையாலோ, அரசரிடம் பணி செய்தோ அல்லது ஏதாவது கைத்திறனாலோ இப்படிப்பட்ட ஏதாவதொன்றில் கைவந்தவராகிறார். களைப்பின்றி அதைப்பற்றி நன்கு விசாரித்துப் பல வழிகளிலும் முறையான முன்னேற்பாடுகள் செய்துகொண்டு அதைச் சிறப்பாகச் செய்து முடிக்கிறார்; சாதித்து முடிக்கிறார்.

எச்சரிக்கையாக இருக்கும் போது சாதித்தல் என்பது என்ன? ஒருவர் சுறுசுறுப்பாகப் பாடுபட்டு உழைத்தும் அல்லது ஆயுதங்களின் வலிவாலும், நெற்றி வியர்வையைக் கொட்டி, நீதி நேர்மையுடன் சட்டத்திற்குட்பட்டு ஈட்டிய பொருளைச் சிக்கனமாகக் கவனமாகப் பாதுகாத்து வைத்தால், அப்பொருளை அரசர் அல்லது அரசாங்கம் பறிமுதல் செய்யவோ, திருடரால் களவாடவோ, நெருப்பாலோ, நீராலோ அழிக்கவோ, தேவையற்ற வாரிசுதாரர்களால் எடுத்துக் கொள்ளவோ முடியாது. இதுவே எச்சரிக்கையாக இருக்கும் போது சாதித்தலாகும்.

நல்ல நட்பென்றால் என்ன? ஒருவர் சிற்றூரில் வாழ்ந்தாலும், நகரத்தில் வாழ்ந்தாலும், இளைஞர்களிடமோ, முதியவர்களிடமோ யாரிடம் பழகினாலும், உரையாடினாலும், விவாதித்தாலும், அவர்கள் நாகரிகமுடையவர்களாக, முழு நம்பிக்கைக்குரியவர்களாக, முழுமையான நல்லொழுக்கமுடையவர்களாக, முழுமையான கொடைத்தன்மையுள்ளவர்களாக, முழுமையான அறிவுபடைத்தவர்களாக இருக்க வேண்டும். நம்பிக்கையானவர்களின் நம்பிக்கையுடன், ஒழுக்கமானவர்களின் ஒழுக்கத்துடன், கொடைத்தன்மையுடையவர்களின் கொடையுடன் அறிஞர்களின் அறிவுடன் இயங்க வேண்டும். அதுவே நல்ல தூய நட்பாம்.

சமநிலையான வாழ்கை முறை யென்றால் என்ன? ஒருவனுக்குத் தனது வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்பது தெரியும். செலவு வருமானத்தை மீறக் கூடாதென்பதும் தெரியும். ஆகையால் அவன் வரம்பு மீறிச் செலவு செய்யவும் கூடாது. கஞ்சத்தனமாகவும் இருக்கக் கூடாது. ஒரு பொற்கொல்லனுக்கோ அல்லது அவனிடம் வேலைகற்றுக்கொள்பவனுக்கோ தராசைப் பிடிக்கும் போதே அது எவ்வளவு சரிந்திருக்கின்றது அல்லது எவ்வளவு சாய்ந்திருக்கிறது என்பது தெரியும். அதைப்போலவே ஒருவனுக்குத் தனது வருமானமும் செலவும் எவ்வளவு என்று தெரியவேண்டும். குறைந்த வருமானமுடைய ஒருவன் வரம்பு மீறிச் செலவு செய்து ஆடம்பரமாக வாழ்ந்தால், அவனைப் பார்த்து 'இவன் தன் செல்வத்தை விளாம்பழத்தை சாப்பிடுபவனைப் (அதாவது, சுரண்டிச் சுரண்டிச் சாப்பிடுபவனைப்) போல அநுபவிக்கிறான்' என்று கூறுவர். அதைப்போலவே நல்ல வருமானமுடையவன் கஞ்சத்தனமாக வாழ்ந்தால், அவனைப் பார்த்து 'இவன் ஒரு பிச்சைக்காரனைப்போல இறப்பான்' என்பர்.

ஒருவன் சேமித்த செல்வம் நான்கு வழிகளில் இழக்கப்படுகிறது. காமாந்தகாரத்தால், குடிப்பழக்கத்தால், சூதாட்டத்தால், தீமை செய்யும் நண்பர்களால் செல்வம் இழக்கப்படுகிறது. சான்றாக ஒரு பெரிய குளத்திற்குத் தண்ணீர் வருவதற்கு நான்கு வழிகளும், வெளியேறுவதற்கு நான்கு வழிகளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீர் வரும் நான்கு வழிகளையும் மூடிவிட்டு வெளியேறும் நான்கு வழிகளையும் திறந்து வைத்திருந்து, மழையும் பெய்யாவிட்டால், தண்ணீர் குறைந்துவிடுமென்பதை நாம் எதிர்பார்க்கலாம். அதைப்போலவே செல்வமும் இந்நான்கு வழிகளில் அழிந்துவிடும்.

சேமித்த செல்வத்தைக் காப்பாற்றுவதற்கும் நான்கு வழிகளிருக்கின்றன. அவையாவன காமவெறியைத் தவிர்த்தல், குடியைத் தவிர்த்தல், சூதாட்டத்தைத் தவிர்த்தல், தீயவர்களின் நட்பைத் தவிர்த்தல். ஒரு பெரிய குளத்திற்குத் நீர் வருவதற்கு நான்கு வழிகளும், நீர் வெளியேறுவதற்கு நான்கு வழிகளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவன் குளத்திற்கு நீர் வரும் வழிகளைத் திறந்து வைத்துவிட்டுக் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வழிகளை மூடிவிட்டால், நல்ல மழையும் பெய்தால், அக்குளத்தில் நீர்மட்டம் உயருமென்று நாம் எதிர்பார்க்கலாம்.அதைப்போலவே, இந்த நான்கு வழிகளிலும் செல்வம் பாதுகாக்கப்படுகிறது.




95. மற்றவரை விசாரணை செய்யும் நீதிபதி ஆகாதீர்கள். மற்றவரைக் கண்டிக்காதீர்கள். மற்றவர் குறைகளைக் கண்டிப்பவன் தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறான்.


A.III,351

96.  இந்த ஐந்து வாணிகத்தையும் இல்வாழ்க்கை நடத்தும் சாதாரண மக்கள் செய்யக் கூடாது. அவை எவை? ஆயுதங்களை விற்பனை செய்தல், மனிதர்களை விற்பனை செய்தல், இறைச்சி வாணிகம், போதை தரும் பொருள்களை விற்பனை செய்தல், நஞ்சு விற்கும் வாணிகம் ஆகியவையே அவை.


 
A.III,208

97. நான்கு நற்குணங்களிருந்தால் ஒருவனை நல்லவன் என அறிந்து கொள்ளலாம். அவை எவை?

நல்லவன் மற்றவர்களின் கெட்ட குணங்களைப் பற்றிக் கேட்டால்கூடக் கூறமாட்டான். அப்படி இருக்கக் கேட்காதபோது சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ஆனால் கேள்விகள் கேட்கப்பட்டு அவன் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும்போது (உதாரணத்திற்கு ஒரு நீதிமன்றத்தில்), மற்றவனின் கெட்ட குணங்களைப் பற்றி அடக்கத்தோடும், தயக்கத்துடனும், சுருக்கமாகவும் கூறுவான். 'இவன் நல்ல மனிதன்' என்று கூறும் சொற்களின் பொருளே இதுதான்.

மறுபடியும் நல்ல மனிதன் கேட்காத போதும் ஒருவனின் நற்குணங்களைப் பற்றிப் பேசுவான். அப்படி இருக்கக் கேட்கும் போது சொல்ல வேண்டியதே இல்லை. ஆனால் கேள்விகள் கேட்கப்பட்டு அவன் பேச வேண்டிய நிலை ஏற்படும்போது, எதையும் மறைக்காது மற்றவனைத் தயக்கமின்றி ஆர்வத்துடன் முழுமையாகப் புகழுவான். 'இவன் நல்ல மனிதன்' என்று கூறும் சொற்களின் பொருளே இதுதான்.

மறுபடியும் அந்த நல்ல மனிதன் அவனைப்பற்றிக் கேட்காத போதும் கூட, அவனைப் பற்றிய சொந்த அவமானத்திற்குரிய செய்திகளைக் கூடக் கூறுவான். அப்படி இருக்கக் கேட்கும் போது சொல்ல வேண்டியதே இல்லை. மேலும், கேள்விகள் கேட்கப்பட்டு அவன் பேச வேண்டிய நிலை ஏற்படும்போது, எதையும் மறைக்காமல் அவனுக்கு அவமானம் ஏற்படக் கூடியவற்றைப் பற்றிக் கூடத் தயக்கமின்றி முழுமையாகக் கூறிவிடுவான். 'இவன் நல்ல மனிதன்' என்று கூறும் சொற்களின் பொருளே இதுதான்.

இறுதியாக அந்த நல்ல மனிதன் தனக்குப் பெருமை தரக்கூடிய செயல்களை மற்றவர் கேட்டாலுங்கூடக் கூற மாட்டான். அப்படி இருக்கக் கேட்காதபோது சொல்ல வேண்டியதே இல்லை. மேலும், கேள்விகள் கேட்கப்பட்டு அவன் பேச வேண்டிய நிலை ஏற்படும்போது, தனக்குப் பெருமை தரும் செயல்களைப் பற்றி அடக்கத்துடன் தயக்கத்துடனும் சுருக்கமாகவும் கூறுவான். 'இவன் நல்ல மனிதன்' என்று கூறும் சொற்களின் பொருளே இதுதான்.



98.  என் துவராடையின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் அடிமேல் அடி வைத்து என்னைப் பின் தொடர்ந்தாலும், அவன் ஆசைகளில் தகாத விருப்பங் கொண்டு, கொடூரமாக ஏங்கிக் கேடு நினைக்கிற உள்ளத்தோடு, இலஞ்ச லாவண்ய எண்ணத்தோடு, கவனக் குறைவோடு, அடக்கமின்றி, கூச்சல்குழப்பத்துடன், அடக்க முடியாப் புலனுணர்வுகளோடு என்னைத் தொடர்ந்தால், அவன் என்னிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறான். ஏன்? அவன் அறத்தைப் பார்ப்பதில்லை; அறத்தைப் பார்க்காததால் அவன் என்னைப் பார்ப்பதில்லை.

ஒருவன் நூறு கல் தொலைவிற்கு அப்பாலிருந்தாலும், அவன் ஆசைகளில் தகாத விருப்பமின்றி, ஏக்கத்தில் கொடூரமின்றி, இரக்க குணத்துடன், தூய்மையான உள்ளத்துடன், கவனத்துடன், அமைதியுடன், ஒரே குறிக்கோளுடன் புலன்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தானேயானால் உண்மையிலேயே அவன் எனக்கு மிக அருகில் இருக்கிறான். நானும் அவன் அருகில் இருக்கிறேன். ஏன்? அவன் அறத்தைக் காண்கிறான்; அறத்தைக் காண்பதால் அவன் என்னைக் காண்கிறான்.



It.91

99. ததாகதர் பேரறிவு பெற்றதிலிருந்து அவர் இறக்கும் வரை என்னென்ன மொழிந்தாரோ, பேசினாரோ, பிரகடனப்படுத்தினாரோ அவை அனைத்தும் உண்மையானவை. வாய்மையானவை. வாய்மையற்றதன்று. அதனால் தான் அவர் ததாகதரென்று அழைக்கப்படுகிறார்.



A.II,24

100.  ஒரு பகைவன் மற்றொரு பகைவனுக்கு அல்லது
வெறுப்பவன் வேறொரு வெறுப்பவனுக்குச்
செய்யக் கூடிய தீமையைவிடத்
தீய திசைகளில் செலுத்தப்பட்ட மனம்
ஒருவனுக்கு மிகப் பெரிய தீமை விளைவிக்கிறது.

தாயோ தந்தையோ
வேறு உறவினரோ
செய்ய முடியாத நன்மையைச்
சரியான முறையில் நடத்தப்பட்ட மனம் செய்யும்.


Dhp.42-43

101.  'எவருக்குப் பொறுமையில்லையோ அவர்கள் இந்த உலகிலும் வருந்துவார்கள். அவர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் அடுத்த பிறப்பிலும் வருந்தவே செய்வார்கள்!' என்பதை நினைத்து ஒருவரின் பொறுமையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றவர் செய்த தீய செயல்களால் இத்துன்பம் ஏற்பட்டாலும் என் உடலே அத்துன்பத்திற்குத் திடலாகும்; நிலமாகும். இத்துன்பத்திற்குக் காரணமான வினைகள் (செயல்கள்) என்னுடையவையே!' என்று ஒருவர் எண்ணவேண்டும்.

'தவறு செய்யாதவர்கள் இல்லையென்றால் நான் பொறுமையை எப்படி முழுமைக்குக் கொண்டுவரமுடியும்?' என்று ஒருவர் நினைக்க வேண்டும்.

'இன்று அவர் தவறு செய்பவராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் என்னை ஆதரித்தவராகக்கூட இருந்திருக்கலாம்!' என்று ஒருவர் நினைக்கவேண்டும்.

'ஒரு தவறு செய்பவர் அதே நேரத்தில் மற்றவரை ஆதரிப்பவராகக்கூட இருக்கலாம். ஏனென்றால் அவர் மூலமாகவே பொறுமையைப் பயிற்சி செய்து கொள்ளலாம்!' என்றொருவர் நினைக்க வேண்டும்.

'எல்லா உயிர் வாழ்வனவும் என் குழந்தைகளைப் போன்றவர்களே. குழந்தைகள் செய்த தவற்றுக்கு எந்தப் பெற்றோர் கோபப்படுவர்?' என்றொருவர் நினைக்க வேண்டும்.

'அவன் எனக்குக் கெடுதல் செய்கின்றான் என்றால் ஏதோ என்னுள் தவறிருக்கிறது, நான் முயற்சி செய்து என் தவற்றை நீக்கவேண்டும்.' என்றொருவர் நினைக்க வேண்டும்.



102. கோபமடைந்த ஓர் ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ கட்டுப்படுத்த ஏழு நிபந்தனைகளுள. அவை எதிரிகளுக்குக் கைம்மாறாகவும் உதவியாகவும் இருக்கின்றன. அவை எவை?

எதிரியைப் பற்றிய ஒருவனின் கருத்தைப் பாருங்கள். 'அவன் அழகற்றவனாக இருக்க வேண்டும்!' ஏன்? ஒருவன் அழகான எதிரியைவிரும்ப மாட்டான். இவன் குளித்து எண்ணெய் தேய்த்து ஒழுங்காகத் தாடியையும் முடியையும் கத்தரித்து இருந்தாலும் அவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், அவன் அழகற்றவனாகிறான்.

எதிரியைப் பற்றிய மற்றொருவனின் கருத்தைப் பாருங்கள். 'அவன் நன்றாகத் தூங்கக் கூடாது!' ஏன்? ஒருவன் தன் எதிரி நன்றாகத் தூங்குவதை விரும்ப மாட்டான். இவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால் வெள்ளைக் கம்பளம் விரித்து, அதன் மேல் கம்பளித் துணியால் போர்த்தி, அதன் உறைகளெல்லாம் பூ வேலைப்பாடு செய்யப்பட்டு, அதன் மேல் கறுப்புமான் தோலால் போர்த்தி, படுக்கைக்கு மேற்புறமும் மேற்கட்டி கட்டி, சிவப்பு மெத்தைத் திண்டுகளைப் படுக்கையின் ஒவ்வொரு விளிம்பிலும் போட்டிருந்தாலும் அவனுடைய கோபத்தால் அவன் நன்றாகத் தூங்க முடியாது.

மறுபடியும் எதிரியைப் பற்றிய ஒருவனின் கருத்தைக் காணுங்கள்! 'என் எதிரி ஏழையாக மாற வேண்டும்!' ஏன்? ஒருவன் செல்வந்தனான எதிரியை விரும்ப மாட்டான். இவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், இவன் உறுதியுடன், கைபலத்தாலும், நெற்றி வியர்வையாலும நேர்மை யாகவும் சட்டபூர்வமாகவும் சம்பாதித்த அச்செல்வங்களனைத்தையும் அரசன், அவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், அரசாங்கக் கருவூலத்திற்கு எடுத்துச் செல்லக் கட்டளையிடுவான்.

மற்றொருவன் தன் எதிரியைப் பற்றி நினைப்பதைப் பாருங்கள்! 'என் எதிரி புகழுடன் வாழக்கூடாது!' ஏன்? புகழுடன் வாழும் எதிரியை ஒருவன் விரும்ப மாட்டான். இப்படிப்பட்டவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், அவன் எவ்வளவு புகழை ஈட்டியிருந்தாலும், அவன் கோபத்தில் மூழ்கியிருப்பதால் அப்புகழனைத்தும் அவனை விட்டு நீங்கிவிடும்.

இன்னொருவன் தன் எதிரியைப் பற்றி நினைப்பதைப் பாருங்கள்! 'என் எதிரிக்கு நண்பர்களே இருக்கக்கூடாது!' ஏன்? ஒருவன் தன் எதிரி நண்பர்களுடன் இருப்பதை விரும்ப மாட்டான். இவனைப் பொருத்தவரை இவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், நண்பர்களும் மிக நெருங்கியவர்களும், உறவினரும், கிளைஞரும் இவனைத் தவிர்த்து வெகு தொலைவிலேயே வாழ்வர். ஏனென்றால் இவன் கோபத்திலேயே மூழ்கியிருக்கிறானே.

இறுதியாக ஒருவன் தன் எதிரியைப் பற்றி நினைப்பதைப் பாருங்கள். 'அவன் நரகத்திற்குப் போவதை நான் விரும்புகிறேன்!' ஏன்? ஒருவன் தன் எதிரி சொர்க்கத்திற்குப் போவதை விரும்ப மாட்டான். இவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், உடலால், சொல்லால், உள்ளத்தால் அவனே தீய நடத்தைகளில் ஈடுபடுவதால் அவனே நரகத்திற்குச் செல்வான்.

இவையே அந்த ஏழு நிபந்தனைகள்! இந்நிபந்தனைகளே கோபமடைந்த ஆணையோ அல்லது பெண்ணையோ தொடர்ந்து சென்று பிடித்து எதிரிகளுக்குக் கைமாறாகவும் உதவியாகவுமிருக்கின்றன.


103. ஒரு தொழு நோயாளி, அவன் கைகால்கள் அழுகிச் சீழ்பிடித்துத் தொல்லைதரும் வேதனையோடு துன்புறும்போது அவனுடைய திறந்த புண்களை நகத்தாலும், உடலை ஒரு சிறு கரித்துண்டாலும் சொறிந்து கொள்வான். பிறாண்டிக் கொள்வான். அதிகமாக அவன் அப்படிச் செய்யச் செய்ய அவனுடைய திறந்த நிலையிலிருக்கும் புண்கள் சீழ்பிடித்து, கெட்ட நாற்றத்துடன் அழுகிப் போகும். ஆனால் அவன் சொறிந்து கொள்வதால் சற்று நிவாரணம் கிடைக்கும்.

அதைப்போலவே இதுவரை பற்றிலிருந்தும் புலன் உணர்வு ஆசைகளிலிருந்தும் விடுதலை பெறாதவர்கள் ஆசையால் உந்தப்பட்டு அலைந்து புலனுணர்வு மகிழ்ச்சிக்கு ஏங்கி அதனைத் துரத்திக் கொண்டிருப்பர். அவர்கள் புலனுணர்வுக்காக ஓட ஓட அவர்கள் அதற்காக யாசிப்பர், அலைவர். இது அவர்களுக்குச் சிறிதே நிவாரணமளிக்கும்.



104. சோம்பேறித் தனத்துடன் இந்த ஆறு ஆபத்துகளும் சேர்ந்தேயிருக்கின்றன. 'இப்பொழுது கடுங்குளிர்’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'இப்பொழுது கடும் வெய்யில்’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'இது அதிகாலை’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'இப்பொழுது காலங்கடந்து விட்டது’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'எனக்கு நிரம்பப் பசிக்கிறது’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'நான் அதிகமாகச் சாப்பிட்டு விட்டேன்’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது போன்றவையே இந்த ஆறு ஆபத்துகளாம்.


D.III,184

105. பூங்காவில் குடியிருப்பவர்களுக்கு அண்ணல் கௌதமர் அறத்தைப் போதிக்கும் பொழுது அவர்களைப் பெருமைப் படுத்துவதுமில்லை. இழிவு படுத்துவதுமில்லை. அதற்கு மாறாக அங்கு கூடியிருந்த மக்களுக்கு அறத்தைப் போதிக்கும்போதே அவர்களை மகிழ்விக்கிறார், உயர்த்திப் பேசுகிறார், ஊக்கமளிக்கிறார், மகிழ்ச்சியிலாழ்த்துகிறார். அண்ணல் கௌதமரின் வாயிலிருந்து வரும் ஒலிக்கு எட்டு குணங்களுள. அது தனித்தன்மை கொண்டது, புரிந்து கொள்ளக் கூடியது, இனிமையானது, கேட்கமுடிவது, சரளமானது, தெளிவானது, ஆழமானது மற்றும் ஒத்த அதிர்வுடையது. ஆகையால் அவர் போதிக்கும்போது அவர் போதனை அம்மண்டபத்தைவிட்டு வெளியே போவதில்லை. மக்களும் மகிழ்ச்சியடைந்தபிறகு, உயர்வுபடுத்திய பிறகு, ஊக்கமும் மகிழ்வுமடைந்தபிறகு, அறத்தை அவ்வளவு ஆழ்ந்து அனுபவித்தபிறகு, விருப்பமின்றியே தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து அவர் மீது தங்கள் விழிகளைப் பதித்தவாறே பிரிவர்.



106. முட்டாளை அவன் செயல்களால் அறிந்து கொள்ளலாம், அதேபோல் அறிஞனையும் அவன் செயல்களால் அறிந்து கொள்ளலாம். ஒருவனின் செயலால் அவனது அறிவு தெளிவாக்கப்படுகிறது.



107. பண்பு நிறைந்த மாணவனிடம், முழுமையாகத் ததாகதருக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவனிடம், ததாகதரைப் பற்றியோ அல்லது அவருடைய போதனைகளைப் பற்றியோ எவ்வித சந்தேகமோ அல்லது தடுமாற்றமோ இருக்காது. அப்படிப்பட்ட மாணவர்கள் மனத்துணிவுடனும், வலிமையுடனும் வாழ்வர். எப்போதும் தீய குணங்களைக் களைந்து நற்குணங்களை வளர்த்துக் கொள்ள முயல்வர். அவர்கள் சுறுசுறுப்புடன் முனைந்து செயல்பட நினைப்பர். நன்மையை இழந்துவிட மாட்டார்கள்.



108. ஒழிக்கப்பட வேண்டிய தீய எண்ணங்கள் அல்லது வன்மம் எழும்பொழுது அதனை அடக்கி வெற்றி கொள்ள ஐந்து வழிகளுள. எவை அந்த ஐந்து வழிகள்?

எவரிடத்தில் இந்த வன்மம் அல்லது தீய எண்ணம் எழுகிறதோ அவர்கள் தங்களுக்குள் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எவரிடத்தில் இந்த வன்மம் எழுகிறதோ அவர்கள் தங்களுக்குள் கருணையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எவருள் தீய எண்ணம் எழுகிறதோ அவர் சாந்தத்தையும், நிதானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எவருள் தீய எண்ணம் எழுகிறதோ அவர் அதை மறந்துவிட வேண்டும். அதன்மீது கவனம் செலுத்தவே கூடாது.
எவருள் தீய எண்ணம் வளர்கிறதோ, அது அவருடைய சொந்த உற்பத்தியே. ஆதலால் அதை அவர் மனத்தில் நிலை நிறுத்தி, 'இது நானே உருவாக்கிக் கொண்டது, என் செயல்களின் வாரிசு, என் செயல்கள் இதன் உற்பத்திக்கான சூழலை உருவாக்கியது, என் செயல்களே அதன் உறவும் அடிப்படையுமாகும். ஒருவர் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதன் வாரிசாகவே மாறுவர்.' என்று எண்ண வேண்டும்.

இவ்வைந்து வழிகளால் தீய எண்ணத்தைத் தவிர்த்து விட வேண்டும்.


109. நல்லவர்கள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் விரைவில் சமாதானமடைந்து நீண்ட நாள் நிலைக்கக் கூடிய ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதற்கும் உதவாத விரிசலுடைய உடைந்த பானைகளைப் போல முட்டாள்களே சமாதானத்தை நாடுவதில்லை. இதைப் புரிந்த கொண்ட ஒருவன், இந்தப் போதனையைச் சிந்தித்துப் பார்ப்பவன் எது கடினமானதோ அதைச் செய்ய முற்படுகிறான். அவன் போற்றத்தக்கவன். யார் ஒருவன் மற்றவரின் தூற்றுதல்களைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே சமரசம் செய்வதற்குத் தகுதியானவன்.




110. மற்றவர் எண்ணும் வகையில் ஒருவர் திறமையுள்ளவராக இருக்க முடியாது. ஆனால் இப்படி ஒரு முடிவாவது எடுக்கலாம்: 'என் எண்ணத்தின் படி நான் திறமையுள்ளவனாக மாறுவேன்!' இப்படித்தான் நீங்கள் உங்களுக்கே பயிற்சியளித்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்படித்தான் அது முடிக்கப்படுகிறது. தங்களை அலங்கரித்துக் கொள்வதில் நாட்டமுடைய ஒரு பெண், ஓர் ஆண் அல்லது ஒரு இளைஞன் தங்கள் உருவத்தை ஓர் ஒளி மிக்கத் தெளிவான கண்ணாடியிலோ அல்லது ஒரு பாத்திரத்திலிருக்கும் தெளிந்த நீரிலோ பார்த்து, கறையோ அல்லது பருவோ இருந்தால் அதை நீக்க முயற்சிப்பர். அந்தக் கறையோ, பருவோ மறைந்த பிறகு மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் 'தூய்மையாக இருப்பது அனுகூலமே.' என்று நினைப்பர்.

இதே வழியில், நல்ல நிலையில் இருக்கும் போது ஒருவன் தன்னையே சோதித்துக் கொள்ளல் மிகவும் பயன் தரும். 'நான் வழக்கமாகவே பேராசைக்காரனா அல்லது வெறுக்கத்தக்கவனா, சோம்பேறித்தனத்துடன் உணர்ச்சியற்று இருக்கிறேனா, கிளர்ச்சி கொண்ட மனத்துடன் இருக்கிறேனா அல்லது சந்தேகத்துடனும் கோபத்துடனும் இருக்கிறேனா அல்லது நான் அப்படி இல்லையா?'

'கறைபட்ட எண்ணங்களுடன் நான் வாழ்கிறேனா அல்லது தூய்மையான எண்ணங்களுடனா, உடல் அன்புணர்ச்சியுடனிருக்கிறதா இல்லையா?, மந்தமாக இருக்கிறதா, சுறுசுறுப்பாக இருக்கிறதா? கட்டுப்படுத்தப்படவில்லையா அல்லது சரியாகக் கட்டுப்படுத்தப் படுகிறதா?'

தற் சோதனையில் ஒருவன், தான் இப்படிபட்ட தீய பயனற்ற நிலையில் வாழ்வதையுணர்ந்தால், அவன் மேலும் விருப்பப்பட்டு, முயற்சி எடுத்து, பிரயத்தனம் செய்து, சக்தியுடனும் , கவனத்துடனும் அக்கறையுடனும் இவற்றைக் கைவிட வேண்டும்.

மேலும் மேலும் தற்சோதனையில் அவன் இப்படிபட்டத் தீய பயனற்ற வாழ்க்கை வாழவில்லை என்பதைத் தெரிந்துகொண்டால், முயற்சி செய்து பயன்தரும் நிலையை உருவாக்கி மாசுகளை மேலும் ஒழிக்க வேண்டும்.



111. ஒரு சமயம் அண்ணல் காசியில் நீண்ட நாள் தங்கியிருந்தபின் உருவிலா நோக்கிப் பயணப் பட்டார். சாலையை விட்டுத் திரும்பியபின் மரங்களடர்ந்த ஒரு சோலையில் நுழைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அதே நேரத்தில் நல்ல வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த முப்பது நண்பர்கள் தங்கள் மனைவிமார்களுடன் அதே சோலையில் மகிழ்ந்திருந்தனர். அந்நண்பர்களில் ஒருவனுக்கு மட்டும் மனைவி இல்லை. ஆதலால் அவனுக்காக ஒரு விலைமகளை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் போது அவ்விலைமகள் அவர்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாள்! அதனால் அந்நண்பர்கள் அவளைத் தேடிச் சுற்று முற்றும் அலைந்து கொண்டிருந்த பொழுது அண்ணல் ஒருமரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அவரை அணுகி:

'அண்ணலே நீங்கள் ஒரு பெண்ணை இங்கு பார்த்தீர்களா?' என்று வினவினர்.

'என்ன இளைஞர்களே அவளிடம் உங்களுக்கு என்ன வேண்டியிருக்கிறது?' என்று கேட்டார்.

அவர்கள் நடந்தவற்றை கூறி, அதற்காகத்தான் அவளைத் தேடுவதாகக் கூறினர்.

அப்போழுது அண்ணல் கேட்டார்:

'எது சிறந்ததென நினைக்கிறீர்கள்? அவளைத் தேடுவதா அல்லது உங்களையே தேடிக்கொள்வதா?'

'உண்மை தான் அண்ணலே. எங்களையே தேடிக் கொள்வதே சிறந்ததாகும்.'

'அப்படியென்றால் அமருங்கள். உங்களுக்கு நான் அறத்தைப் போதிக்கிறேன்.'

நண்பர்களெல்லாம் அமர்ந்த பிறகு அண்ணல் அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பயனுள்ள சிறந்ததொரு சொற்பொழிவினை நிகழ்த்தினார். ஒழுக்கம், சொர்க்கம், ஆபத்தான, பயனற்ற, புலனுணர்வுகளால் விளையும் தீமைகள், அவற்றைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறினார். அவர்கள் உள்ளம் பண்பட்ட நிலைக்கு வந்து விட்டதை உணர்ந்த அண்ணல், அவர்கள் வளையக் கூடிய பதப்பட்ட நிலையிலிருக்கிறார்கள் என்பதையுணர்ந்து, மாசுகள் இல்லாததையும், மேம்பட்ட நிலையில் இருப்பதையும் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் உணர்ந்து புத்தர்களுக்கு மிக உயர்ந்த போதனைகளான துக்கம், துக்க உற்பவம், துக்க நிவாரணம், நிவாரண மார்க்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.




112. சூதாட்டத்திற்கு அடிமையானால் அவர்களுக்கு ஆறு ஆபத்துக்களிருக்கின்றன. சூதாட்டத்தில் வெற்றி பெற்றால் அவன் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு அதிகரிக்கும், தோற்றால் செல்வம் இழந்ததை நினைத்து வருந்துவான்; நீதிமன்றத்தில் அவன் சொல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நண்பர்களும், அலுவலர்களும் அவனை வெறுத்தொதுக்குவர். ஒரு சூதாட்டக்காரனால் தன் மனைவியைக் காப்பாற்ற முடியாதென்பது மக்களின் எண்ணமாதலால் அவனைத் திருமணத்திற்குத் தகுதியற்றவனென நினைப்பர்.



113. ஒரு அன்பான நண்பன் தரும் உணவே மிக ருசியானது. மிகப் பக்குவத்தோடு செய்யப்பட்ட சுவைமிக்க இனிப்புத் தின்பண்டம் கூட, அன்போடு தரப்பட்ட சாதாரணக் கஞ்சிக்கு ஈடாகாது.


Ja.III,142*

114. ஜீவிகா சொன்னார்: "மிக உயர்ந்த பரிசுத்த நிலை அன்பில்தான் நிலைத்திருக்கிறது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அதற்குச் சான்று நம் அண்ணலே. அவர் அன்பில்தான் நிலைத்திருக்கிறார்." அண்ணல் பதில் அளித்தார்: "தீய எண்ணங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய பேராசை, வெறுப்பு மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றைத் ததாகதர் கைவிட்டு விட்டார். வேறோடு அறுத்தெறிந்து விட்டார். வெட்டப்பட்ட பனை மரத்தின் அடிப்பகுதி எப்படி மறுபடியும் மரமாகதோ அதைப்போல அவற்றை மீண்டும் தோன்றா வண்ணம் களைந்தெறிந்து விட்டார். இதைப்பற்றித்தான் நீ கூறுகிறாய் என்றால், ஜீவிகா, நான் உன் சொல்லை ஏற்றுக் கொள்கிறேன்."


M.I,369*

115. ஒரு முறை ஒரு துறவி சீதபேதியால் பாதிக்கப்பட்டு அவருடைய கழிவுகள் கிடந்த இடத்திலேயே விழுந்து கிடந்தார். அப்போது துறவிகளின் விடுதிகளுக்கு வருகை தந்த அண்ணலும் ஆனந்தரும் அந்தத் துறவி கிடந்த இடத்திற்கு வந்தனர். அண்ணல் துறவியைப் பார்த்து,

'துறவியே, உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று வினவினார்.

'நான் சீதபேதியால் துன்புறுகிறேன்!'

'உங்களைக் கவனிக்க யாருமே இல்லையா?'

'இல்லை அண்ணலே!'

'மற்ற துறவிகள் ஏன் உங்களைக் கவனிக்கவில்லை?'

'ஏனென்றால் என்னால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை அண்ணலே!'

பின்னர் அண்ணல் ஆனந்தரை அழைத்து,

'நீர் கொண்டு வாருங்கள். நாம் இந்தத் துறவியைக் குளிப்பாட்டுவோம்' என்றார். ஆனந்தர் நீர் கொண்டு வந்தார். அண்ணல் நீரைத் துறவியின் மீது ஊற்ற ஆனந்தர் தேய்த்துக் குளிப்பாட்டினார். அண்ணலும் ஆனந்தரும் அத்துறவியைத் தூக்கிப்போய் ஒரு படுக்கையில் கிடத்தினர். பிறகு அண்ணல் மற்றத் துறவிகளையெல்லாம் அழைத்து, 'துறவிகளே நீங்கள் ஏன் அந்த நோய்வாய்ப்பட்டிருக்கும் துறவியைக் கவனிக்கவில்லை?' என்று கேட்டார்.

'ஏனென்றால் எங்களுக்கு அவரால் எந்தப் பயனும் இல்லை அண்ணலே!' என்றனர்.

'உங்களைக் கவனிப்பதற்கு உங்களுக்கு அன்னையோ தந்தையோ இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவில்லையென்றால் பின் யார் தான் கவனிப்பார்? எனக்குப் பணிவிடை செய்ய விரும்புவோர் நோயாளிகளுக்கும் பணிவிடைசெய்ய வேண்டும்.'




Vin.I,301

116. 'தீய எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு ஐந்து வழிகள் இருக்கின்றன!' என்று போற்றுதற்குரிய அறவண அடிகள் சாரிபுத்திரர் கூறினார்.

அவை எவை?

"ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் செயல்களில் தூய்மையற்றவனாக இருப்பான்; ஆனால் பேச்சில் அல்ல. சான்றாக ஒரு துறவி கந்தல் துணியாலான துவராடையை உடுத்தியிருக்கிறார். வழியில் ஒரு கந்தல் துணியைக் கண்டால், இடது காலால் அழுத்தி, வலது காலால் அதை விரித்துப் பார்த்து அக்கந்தல் துணியைப் பயன்படுத்த முடியுமா என்று பார்த்துவிட்டுத் தன் வழியில் செல்வார். அதைப் போலவே சொற்களில் தூய்மையுடையவராக இருந்தும் செயலின் (நடவடிக்கையின்) வழிகள் தூய்மையற்றதாக இருப்பவரின் செயலை நிராகரித்து விடவேண்டும்; மதிப் பளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக அவருடைய தூய்மையான வழிகளைப்பற்றி நினைக்க வேண்டும்.

மற்றொருவன் வார்த்தைகளில் தூய்மையற்று, செயலில் தூய்மையானவனாக இருக்கிறான். அவனிடம் துவேஷம் இல்லாமல் எப்படி நடந்து கொள்வது? உதாரணத்திற்கு ஒருவன்

வெப்பத்தால் சித்திரவதைப்படுத்தப்பட்டு, வெய்யிலில் உழன்று, களைப்புற்று, ஏங்கித் தாகத்தால் தவிக்கும் பொழுது, பாசி படர்ந்து, நீர்ச்செடிகள் வளர்ந்து, சேற்றுடன் இருக்கும் ஒரு குளத்தருகே வருகிறான்.

அக்குளத்தைக் கண்டவுடன் அதிலிறங்கிப் பாசியையும் நீர்ச்செடிகளையும் விலக்கிவிட்டு, இரண்டு கைகளாலும் அந்நீரை அள்ளிப் பருகிப் புத்துணர்வுடன் அவன் வழியே செல்கிறான். இதைப் போலவே ஒருவனின் வார்த்தைகள் தூய்மையற்று அவன் செயல்கள் தூய்மையுடையதாக இருந்தால் அவன் வார்த்தைக்கு மதிப்பளிக்கக் கூடாது. ஆனால் அவனுடைய தூய்மையான செயல்களைப் பற்றி நினைக்கலாம்.

ஒருவன் சொல்லிலும் செயலிலும் தூய்மையற்றவனாக இருந்து, ஆனால் மனத்தில் மட்டும் அவ்வப்போது தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தால் அவனிடம் எப்படி நடந்து கொள்வது? சான்றாக ஒருவன் வெப்பத்தால் (வெய்யிலால்) சித்திரவதைப்படுத்தப்பட்டு , வெப்பத்தில் உழன்று, களைப்புற்று ஏங்கித் தாகத்தால் தவிக்கும் பொழுது ஒரு பசுவின் காலடியால் ஏற்பட்ட பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்கி இருப்பதைப் பார்க்கிறான். 'நான் அந்நீரைக் கைகளால் அள்ளி அருந்த முயன்றால் அந்நீர் கலங்கிச் சேறாகிக் குடிப்பதற்குத் தகுதியற்றதாகிவிடும். ஆதலால் கை, கால்கள் நான்காலும் மண்டியிட்டு ஒரு பசு நீரைக் குடிப்பதைப்போல் குடிப்பதுதான் சரி' என்று நினைத்துக் குடித்துவிட்டு செல்கிறான். அதைப்போலவே ஒருவன் சொல்லிலும் செயலிலும் தூய்மையற்றவனாக இருந்து, ஆனால் மனத்தில் மட்டும் அவ்வப்போது தெளிவாக இருந்தால், அவனது செயலையும் சொல்லையும் நிராகரித்துவிடவேண்டும். மதிப்பளிக்கக்கூடாது. அவனுடைய தெளிவான எண்ணத்தையும் அமைதியான நிலையை மட்டும் நினைக்க வேண்டும்.

ஒருவனின் வழிகளனைத்தும் தூய்மையற்றதே. அவன் மனத்தாலும் அவ்வப்போதும் கூடத் தெளிவடைய முடியவில்லை. அமைதியும் கிடையாது. அவனைப் பற்றி என்ன நினைப்பது? சான்றாக ஒரு நோயாளி நோயில் வருந்தி கொண்டிருப்பவன், உடல் மிக மோசமான நிலையில் ஒரு நெடுஞ்சாலையில் நடந்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னும் பின்னும் ஒரு சிற்றூர் கூட இல்லை. கவனிக்கவும் ஆளில்லை. அவனை அடுத்த கிராமத்திற்கு அழைத்துச் செல்ல வழிகாட்டியும் இல்லை. வேறொரு மனிதன் அவனைக் கண்டு இரக்கப்பட்டுப் 'பாவம் இந்த மனிதன். அவனுக்கு கண்டிப்பாக உதவவேண்டும். இல்லையேல் அவன் துன்புறுவான்' என்று தனக்குள் நினைத்துக் கொள்வான். அதைப்போலவே ஒருவனின் வழிகள் தூய்மையற்றதாக இருந்தால், அவன் அவ்வப்போது கூட மனத்தெளிவு, அமைதி இல்லாமல் இருந்தால் அவன் மீது இரக்கம், கருணை, கழிவிரக்கம் முதலியவற்றுடன், 'பாவம் இவன் கெட்டவற்றையெல்லாம் விட்டுவிட்டு நன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் சாவிற்குப் பிறகு அவனுக்குத் தீய மறுபிறப்பே ஏற்படும்!' என்று நினைக்க வேண்டும்.

ஒருவன் சொல்லாலும், செயலாலும் தூய்மையானவனாக இருந்து தெளிவான மனச்சிந்தனையும் அமைதியுமுடையவனாகவும் இருந்தால், அவன் மீது ஏற்படும் தீய எண்ணங்களை எப்படி ஒழிப்பது? சான்றாக ஒருவன் வெப்பத்தால் சித்திரவதைப்பட்டு வெப்பத்தில் உழன்று களைப்புற்று ஏங்கித் தாகத்தால் தவிக்கும்போது இனிமையான, குளுமையான, தெளிவான பொய்கையைக் (குளத்தை) கண்டு ஓய்வெடுக்க நிழல்தரும் பலவித மரங்களிருக்கும் சோலையையும் கண்டால், அவன் அப்பொய்கையில் மூழ்கிக் குளித்து, நீரருந்திக் களைப்பைப் போக்கி அந்நிழலில் வந்து ஓய்வெடுப்பான். அதைப்போலவே அவனுடைய தூய்மை, தெளிவான மனச்சிந்தனை அமைதியை நினையுங்கள்."






117. எதிரியொருவன் உனக்கு வேதனை உண்டாக்கியதாக வைத்துக்கொள்.
அது அவனுடைய பிரச்சனை.
அதனால் உன்மீது உனக்கேன் கோபம் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்?
உன் மனத்தை ஏன் வருத்திக் கொள்கிறாய்.
உன் மனத்தைக் கவனிப்பதுதானே உன் வேலை?

உன்மீது பாசமும் உதவியுமாயிருந்த
உன் குடும்பத்தை நீ அழவிட்டு, அவர்களை விட்டு வந்துவிட்டாய்.
அவ்வாறிருக்க உன் எதிரிகளை நீ ஏன் விட்டுவிடக் கூடாது
உனக்குத் துன்பத்தையே கொடுக்கும் கோபத்தை ஏன் விட்டுவிடக்கூடாது?

நீ தழுவும் அந்தக் கோபம்
நீ முயன்று வளர்க்கும் ஒழுக்கங்களின்
வேர்களையே தின்றுவிடும்.
அப்படிப்பட்ட முட்டாளாக எவன் இருப்பான்?

எவனோ தீமைகள் செய்தால்
உனக்கு ஏன் கோபம் வருகிறது?
அவனைப்போலப் போலியாக
அவன் செய்ததையே நீயும் செய்ய விரும்புகிறாயா?

சான்றாக, ஒருவன் உனக்குக் கோபமூட்ட
உன்னைத் தீயவை செய்ய ஆத்திரமூட்டுகிறான்.
கோபம் வர நீ ஏன் இடமளிக்கிறாய்?
அவன் விருப்பத்தைப்போல ஏன் நடந்து கொள்கிறாய்?

உனக்குக் கோபம் வந்தால்
அவன் துன்புறலாம், துன்புறாமலுமிருக்கலாம்.
ஆனால், உனக்கேற்படும் கோபவுணர்வால்
கண்டிப்பாக நீ துன்புறுவாய்.

எதிரிகள் கோபத்தால் குருடாகி
துன்பந்தரும் வழியில் நடந்து திருப்தியடைகின்றனர்.
நீயும் கோபத்தை வரவழைத்துக் கொண்டு
எதிரிகளைப் பின்பற்ற விரும்புகிறாயா?

எதிரியொருவன் உனக்கு ஆத்திரமூட்டி
நீ ஆத்திரமடைந்து துன்புற விரும்புகிறான்.
அந்தக் கோபம் தணியட்டும்,
தேவையில்லாக் கேடு வாரா திருக்கட்டும்.


Suppose an enemy has hurt you
118. இல்வாழ்க்கை நடத்தும் சித்தா, துறவிகளைப் பார்த்து: 'ஒரு கறுப்பு இளங்காளை மாடும், ஒரு வெள்ளை இளங்காளை மாடும் ஒரு கயிற்றிலோ அல்லது ஒரு நுகத்தடியிலோ பிணைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஒருவன் கறுப்புக் காளை மாடுதான் வெள்ளைக் காளை மாட்டிற்கு விலங்காக இருக்கிறது என்றோ அல்லது வெள்ளைக் காளை மாடுதான் கறுப்புக் காளைமாட்டிற்கு விலங்காக, காலுக்குச் சங்கலியாக, இருக்கிறதென்று கூறினால் அது சரியா?'

'இல்லை இல்வாழ்க்கை நடத்துபவரே. அவைகளே ஒன்றோடொன்று கயிற்றாலோ நுகத்தடியாலோ கட்டப்பட்டிருக்கின்றன.'

'அதைப்போலவே துறவிகளே பொருள்களுக்குக் கண்ணும் விலங்கல்ல; கண்ணுக்குப் பொருளும் விலங்கல்ல. அதன் பிணைப்பால் எழும் ஆசையும், ஆவலுமே விலங்காம், காலுக்குச் சங்கலியாம். காதும் ஒலிகளும், மூக்கும் மணமும், நாக்கும் சுவையும், மனமும் எண்ணங்களும் பிணைக்கும் சங்கலியல்ல; விலங்கல்ல. இவற்றின் இணைப்பால் (கூட்டால்) ஏற்படும் ஆசைகளே விலங்காம். கால்களைப் பிணைக்கும் சங்கலியாம்.'

'இல்வாழ்வோனே உமக்கிது நன்மைபயக்கும், நன்று கூறினீர். உமக்கு அறிவுக் கண்ணிருக்கிறது. அது புத்த பெருமானின் ஆழமான போதனைகளுக்கு ஏற்றது; முரணற்றது.'


S.IV,282

119. அண்ணலிடம் கிம்பிலா கேட்டான்: 'ததாகதரின் இறுதியான நிர்வாண நிலைக்குப் பின் நல்லறம் நீண்டு நீடிப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?

'ததாகதரின் இறுதி நிர்வாண நிலைக்குப் பிறகு ஆண் துறவிகளும், பெண் துறவிகளும், இல்வாழ்க்கை நடத்தும் ஆண்களும் பெண்களும், ஆசிரியர் (புத்தர்) , அறம் (தம்மம்) , சங்கம் ஆகியவையுடன் பக்தியோடும் அக்கறையோடும், கவனமாகப் பயின்று, மனத்தை ஒருமுகப்படுத்தி நேர்மையாக நல்லெண்ணத்துடன் வாழந்தால் இந்த நல்லறம் நீண்டு நெடுங்காலம் நீடிக்கும்.'



A.IV,84

120. இங்கிருக்கும் சில மூடர்கள், நான் ஒன்றை விட்டுவிடு என்று அறிவுறுத்திய பிறகு, 'சிறிய முக்கியத்துவமற்ற அது என்ன? இந்தத் துறவி சிறிய விசயங்களை மிகவும் வலியுறுத்துகின்றார்.' என்கிறார்கள். அதனால் அதை விட்டு விடாமல் , எனக்கு எதிராகவும் எனது பயிற்சியை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு எதிராகவும் அதிருப்தியை எழுப்புகின்றனர். இது அவர்களுக்கு உறுதியான திடமான பலமான பிணைப்பாகிறது. எளிதில் அறுக்கமுடியாத இந்த பிணைப்பு ஒரு கனமான கட்டையைப் போன்றது.


M.I,449

Sign in|Report Abuse|Print Page|Remo
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.

இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிர்களும்
        கோபப்படாமல் இருப்பார்களாக.    
        வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
        பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
        மனக் கவலையின்றி இருப்பார்களாக.
        உடல் நலத்தோடு இருப்பார்களாக.
இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.

இந்த ஊரில் உள்ள அனைத்து உயிர்களும்
     கோபப்படாமல் இருப்பார்களாக.
     வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
     பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
     மனக் கவலையின்றி இருப்பார்களாக.
     உடல் நலத்தோடு இருப்பார்களாக.
இந்த ஊரில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
இந்த ஊரில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.

இந்த நாட்டில் உள்ள அனைத்து உயிர்களும்
     கோபப்படாமல் இருப்பார்களாக.
     வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
     பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
     மனக் கவலையின்றி இருப்பார்களாக.
     உடல் நலத்தோடு இருப்பார்களாக.
இந்த நாட்டில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
இந்த நாட்டில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.

இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும்
     கோபப்படாமல் இருப்பார்களாக.
     வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
     பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
     மனக் கவலையின்றி இருப்பார்களாக.
     உடல் நலத்தோடு இருப்பார்களாக.
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.

அனைத்து உயிர்களும்
     கோபப்படாமல் இருப்பார்களாக.
     வெறுப்பில்லாமல் இருப்பார்களாக.
     பொறாமைப்படாமல் இருப்பார்களாக.
     மனக் கவலையின்றி இருப்பார்களாக.
     உடல் நலத்தோடு இருப்பார்களாக.
அனைத்து உயிர்களும் அமைதியோடு வாழ்வார்களாக.
அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்வார்களாக.... மகிழ்வோடு வாழ்வார்களாக.... மகிழ்வோடு வாழ்வார்களாக....

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola